குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது.
வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.
என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.
குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.
குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.
பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.
திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.
குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.
வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.
பலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.
முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.
குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்
வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.
ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.
அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.
பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.
சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.
வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.
இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.
ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.
எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.
ஒவ்வாமை
குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.
குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.
உணவு சாப்பிட மறுத்தால்
சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.
சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.
நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.
குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.

ஆரோக்கிய உணவு

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை "ஆரோக்கிய உணவு".
ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவைதான் ஆரோக்கிய உணவு?
நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,
1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
3. அளவோடு உண்பது
என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.
உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டினை (Body Mass Index) பயன்படுத்துங்கள்.
உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.
உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.
உணவுப்பொருட்களில் அடங்கியுள்ள சத்துக்கள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றின தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.
ஒருவர் எத்தனை முறை உண்ணவேண்டும், எவ்வளவு உண்ணவேண்டும் என்பது அவரது வயது, பால், எடை, உடல் உழைப்பு இவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு சக்தி(கலோரி) தேவைப்படுகின்றது என்பதனைப் பொறுத்து அவரது உணவுப்பழக்கத்தினை அமைத்துக் கொள்ளலாம். கலோரிகள் குறித்த பக்கத்தில் இதற்கான விளக்கங்கள் உள்ளன. கலோரி கணிப்பானைக் (Calorie Calculator) கொண்டும் தங்களுக்கு தேவையான கலோரிகளின் உத்தேச அளவினைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இத்தனை விசயங்களைத் தெரிந்து கொண்டுதான் சமைக்க வேண்டுமா? உண்ணவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பினால் அவசியம் இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். காலம் காலமாக பழக்கத்தில் இருந்து வரும் ஒரே மாதிரியான உணவிற்கு உடலை பழக்கப்படுத்தி கொள்வதின் மூலம் ஆரோக்கியமாக வாழ இயலும். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அது பெரும்பான்மையானவர்களுக்கு சாத்தியமாக இருப்பது இல்லை. இந்த நிலையில் நாம் உண்ணும் உணவு குறித்த அறிவு நமக்கு மிகவும் அவசியம் ஆகின்றது. இதனை தெரிந்து கொள்வதினால் நாம் இழக்கப்போவது ஒன்றும் இல்லை. இதனைத் தெரிந்து கொள்ள நாம் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்கப் போவது இல்லை. ஆகையால் ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அடிப்படை விசயங்களை அத்யாவசிய அறிவாய் மாற்றிக்கொள்ளுங்கள்.

பாகற்காய்

பாகற்காய் இலையை அரைத்துச் சாறு எடுத்து ஆசனவாய்ப் புண்களில் தடவி வந்தால்  புண்கள் விரைவில்  குணமாகும்.

பாகற்காய் சாறு(500 மில்லி), அதில் ஒமத்தை (150 கிராம்) ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால்  பெருவயிறு கரையும்.

பாகற்காயை  வெய்யிலில்  காயவைத்துப் பொடி செய்து, தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.

பாகற்காயின் விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.

பாகற்காய் சாற்றில் வெந்தயத்தல ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் சாப்பிடாடு வந்தால் குடல் நோய்கள், சர்க்கரை நோய், உடல் பலவீனம் போன்றவை குணமாகும்.

பாகற்காயில் 'பீட்டா-கரோட்டின்' மற்றும் 'வைட்டமின் ஏ' உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள 'வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்  மூட்டு வலி வராது.

ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டால் கேன்சர் உண்டாகும்

உணவு பழக்க வழக்கத்தைப் பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி நிபுணர் டர்கடர்.மனோகரன் விளக்கமளிக்கிறார். உணவே மருந்து...மருந்தே உணவு... என்ற பழமொழிக்கேற்ப சிறந்த உணவே நமக்கு மருந்தாக அமையும். அதே நேரத்தில், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எந்த உணவையும் அளவோடு எடுத்து கொண்டால் நல்லது. அளவை மீறும் போது அது நமக்கே பல ஆபத்துக்களை விளைவிப்பதுண்டு.


இந்த அவசர நாகரீக உலகத்தில் அனைவரும் அவசரத்தை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அவசரம், அவசரம், எதிலும் அவசரம் எங்கும் அவசரம். உணவிலும் கூட அவசரத்தை விரும்புகிறோம். அதாவது துரித உணவு (பாஸ்ட் புட்) என்று சொல்லக் கூடிய அதிக காரம், அதிக உப்பு, மீண்டும் மீண்டும் சமைத்த எண்ணெயில் செய்த உணவு போன்றவை குடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். சில சமயங்களில் கேன்சர் கூட ஏற்படலாம்.
மேலும் துரித உணவுகளில் சேர்க்கப்படும் சாயம், அஜினமோட்டோ போன்ற பொருட்களை அளவிற்கதிகமாக சேர்த்தால் நமது குடலுக்கு ஆபத்தை விளைவிக்கும். இது யாருக்கும் தெரியாத உண்மை. இதை நாம் நம் குழந்தைகளுக்கும் வாங்கி உண்ண கொடுத்து அவர்களுடைய உடல் நலனையும் கெடுக்கிறோம். பொதுவாக அதிகமான காரம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். சிறந்த உணவு பழக்கவழக்கத்தை கையாண்டால் அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.
அல்சர் வந்த பிறகு உணவுக்கட்டுப்பாடு நேரத்திற்கு உணவு அருந்துதல் மற்றும் மருந்து ஆகியவற்றை கடைபிடித்தால் அல்சர் பிரச்னைக்கு தீர்வு காணலாம். மேலும் அல்சரை உருவாக்குகிற ஹெச் பைலரி கிருமிகளை பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்து அதற்கேற்றார்போல் மருந்து எடுத்து கொண்டால் அல்சரை குணப்படுத்தலாம். சில சமயங்களில் புளித்த ஏப்பம் போல் எதுக்களித்து வரும்.
அதாவது உணவுக்குழாய்க்கும் வயிற்றிற்குமிடையில் உள்ள பகுதியில் பிரச்னை ஏற்பட்டு வயிற்றில் உள்ள அமிலம் உணவுக்குழாய்க்கு மேலே எதுக்களித்து வரும் போது புளித்த ஏப்பம் வரும். சிலருக்கு காலை நேரத்தில் வாந்தி வருவதுண்டு. அதை பித்த வாந்தி என்று கூறுவர். ஆனால் பித்த வாந்தி என்று ஒன்று கிடையாது. பித்த நீரானது கல்லீரலில் சுரந்து பித்தநாளத்தின் வழியாக டியோடினம் என்றும் சிறுகுடலை சென்றடைந்து உணவைச் செரிப்பதற்கு கீழே வந்து விடுகிறது. எனவே பித்த நீரானது மேலே வராது.
வயிறு ஒன்று குப்பை தொட்டியல்ல கண்டதையும் போடுவதற்கு வயிறு ஒன்றும் சுடுகாடல்ல செத்தவற்றை புதைப்பதற்கு எனவே உயிரே உன்னை ஆராதிக்கிறேன் என்று நமது வயிரையும், உடம்பையும் பாதுகாப்பது நமது கையில் தான் உள்ளது.

உடலைக் குளிர்சியாக்கும் கற்றாழை

ஏற்கனவே கற்றாழை பயன்படுத்தி இருந்தால் அதன் பயன்பாடு, ஆரோக்கிய நலன்கள் ஆகியவை பற்றி தெரிந்திருக்கும்.. முகத்தை அழகுபடுத்த காயங்கள், சூடுகளில் ஏற்படும் கட்டி மறைய என பலவற்றிற்கு கற்றாழை பயன்படுகிறது. ஆனால் கற்றாலையை உட்கொள்வதால் ஏற்படும் உடல் நல நன்மைகளை தெரிந்து கொள்வோமா.

கற்றாழையை பொதுவாக அழுத்த எதிர்ப்பி என அழைக்கிறோம். இது உடலை தேவைக்கேற்றபடி மாற்றியமைக்கிறது. இவை இயற்கையிலே பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது. இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கற்றாலை உதவுகிறது. கற்றாலையை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்
போதை நீக்க செயல்: கற்றாழைச் சாறு போதையை நீக்க செயலாக செயல்படுகிறது. தோல் நீக்கிய சோற்றை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.
இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது. இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன் படுத்தப்படுகிறது. வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நொய்கள் தீரும்.ஆண்மை நீடிக்கும்.

ஆண்மையைப் பெருக்கும் அமுக்கிரா கிழங்கு !!


ஆண்மையைசெயல்பட வைக்கும் மூலிகை வேர்தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.
ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும்.இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை “வயாக்ரா” சொன்னால் அது மிகையாகாது.அமுக்கிரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகும். குழந்தை பேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேரு உண்டாகும்.
உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை இது தீர்க்க உதவும். இது உடலின் வலிமையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வல்லது. மூளையின் செயல்பாட்டினை அதிகரித்து ஞாபக சக்தியை உண்டாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் அதே வேளையில் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.

மூலிகைகளின் அற்புதங்கள்

கீழாநெல்லி :

தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் பிழிந்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டுவர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்ல மருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்றகல்லீரலை மீட்கிறது.

துளசி:

மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரûஸ எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி, ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரிக்க, அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. ஆஸ்துமா நோயாளிகளின் நண்பன். 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் பல் கூசுதல் தொண்டை புண் தொண்டைச்சளி குணமடையும்.

கரிசலாங்கண்ணி:

கல்லீரலில் ஏற்படும் புண், வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதில் உள்ள இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண், தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது. ஹெபடைடில் ஏ.பி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் இருமலை மட்டுப்படுத்தும் அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ வாரமிருமுறைஉண்டு வர சளி பிடிக்காது. தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும். இலைகள் கைப்பிடியளவு சிறிது உப்பு சேர்த்து மண் பானையிலிட்டு வதக்கி நாய் கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுத்து அதே இலையை வைத்து கட்டினால் நஞ்சு முறிந்து விடும்.

பிரண்டை: 

பிரண்டை சாறு கருப்பைக் கட்டிக்கு மருந்து. பைலோரி என்னும் கிருமி உண்டாக்கும் வயிற்றுபுண்னை ஆற்ற வல்லது. பசியை தூண்டும்.

அதிமதுரம்:

நாவறட்சி தொண்டைக்கட்டு வறட்டு இருமலுக்கு “டாக்டர்” குடல் புண்னை ஆற்றும். இனிப்பு, சர்க்கரைக்கு பதிலாக அதிமதுரத்தை பயன்படுத்தலாம்.

அருகம்புல்:

ரத்த கொலஸ்டிராலைக் குறைக்க, உடல் எடை குறைய உதவும் நச்சுக்களால் உடலில் ஏற்படும் திடீர் அரிப்பு நோய் ஒவ்வாமை நோய்க்கு அருகம்புல் சாறு 100மி தினமும் 2 வேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிட 15 நாளில் பலனுண்டு.

மிளகின் வகைகளும் அதன் மருத்துவ குணங்களும்

மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகைப்படும்.

வேறு பெயர்கள்-

மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம்.


பயன் தரும் பாகங்கள் -:

கொடி, இலை மற்றும் வேர் முதலியன.
"
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”- என்று சித்தமருத்துவ வழக்குமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி சொல்லவருவது மிளகு உணவின் நச்சுத்தன்மையை போக்கும் குணமுடையது என்பதுதான்.

இன்று காரமான சுவைக்கு நாம் பயன்படுத்தும் மிளகாய், நமக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் பரிச்சயமில்லாதது. காரமான சுவை வேண்டிய போது நம் பாட்டியும் முப்பாட்டனும் சமைத்தது
மிளகை வைத்துத்தான். சிலி நாட்டிலிருந்து சில நூறு வருடங்கட்கு முன் மிளகாய் நமக்கு அறிமுகமானபோது மிளகைப் போல் காரமாக இருந்ததால் தான் அதற்கு மிளகாய்(மிளகு+ஆய்) என்று பெயரிட்டனர். மிளகு பல ஆயிரம் ஆண்டுகளாய் நமக்கு பழக்கமான ஒன்று.

’திரிகடுகம்’ எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி கூட்டணியில் உள்ள மிளகு, உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் நறுமணப் பொருள்.

இப்போது தாளித்து எடுக்கும் முறைக்கும் அப்போதைய தாளிசத்திற்கும் நிறையவே மாறுதல் உண்டு. இது குறித்து முன்பே நாம் பேசியுள்ளோம். இப்போது உள்ள கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை அக்காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக ’திரிதோட சமப் பொருட்கள்’ எனப்படும் மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன்படுத்தபட்டன. இந்த திரிதோட சமப் பொருட்கள், உணவு சமைக்கப்பட்ட பின்பு சேர்க்கப்படும் போது, சுவையினைப் பெருக்குவதுடன், சீரணத்தயும் சீராக்கி, உணவால் எவ்வித கேடும் விளையாமல் உடலைப் பேணும். அந்த திரிதாட சமப்பொருளின் ’டீம் லீடர்’ மிளகுதான். அதனால் ஒவ்வொரு உணவிலும் மிளகு இருப்பது ஹெல்த் இன்ஷியூரன்ஸுக்கு கட்டும் பிரீமியத்தைக் காட்டிலும் பாதுகாப்பு தரும்.

மிளகை அதன் உலர்ந்த பழமாகவே(கருப்பு குறு மிளகு) நாம் பெரும்பாலும் பயன்படுத்தினாலும், சில இடங்களில் தொலி நீக்கிய வெண்மிளகாகவும் பயன்படுத்துவர். வெண் மிளகில் காரம் குறைவு. சத்தும் சற்று குறைவுதான். சூப்பில் போட்டு கொஞ்சம் மணமோடு அலங்கரிக்க உதவுமே தவிர வேறு விசேஷமில்லை. அதனால் கருப்புதான் சிறப்பு!

மிளகு சற்று வெப்ப குணமுடையது. சீதளத்தை போக்குவதில் மிளகு முதல் மருந்து. நமக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவிலும் பழங்களிலும் மிளகைத்தூவி சாப்பிடுவது அந்த உணவால் சளி பிடிக்காமல் இருக்கத்தான். வெள்ளரிக்காயில் மிளகைத் தூவி சாப்பிட உடலும் குளிரும். சளியும் பிடிக்காது. மிளகுக்குப் பதிலாக ரோட்டோரங்களில் கடற்கரையில் மிளகாய்வற்றல் பொடியைத் தூவிக் கொடுக்கப்படும் வெள்ளரியில் பயனில்லை. அது வெள்ளரியையும் கெடுக்கும்.வயிறையும் கெடுக்கும்!

வெள்ளரி, வெள்ளைப்பூசணி, சுரைக்காய், தர்ப்பூசணி, பாசிப்பருப்பு போட்டு செய்யப்படும் வெண்பொங்கல் முதலான உணவுவகைகளில் மிளகு சேர்ப்பது அவசியம்.பால் அனைவருக்கும் அவசியமில்லாத பொருள் என்றாலும், சில நேரங்களில் மருந்தாக/ ஊட்ட உணவாக சில நோயாளிகளுக்குத் தேவைப்படும். அச்சமயம் பாலில் மிளகு சேர்த்து தருவது அவசியம். சளி இருமல் இருப்பவர் பால் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயமிருப்பின், சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவது மிக அவசியம்.

.வளரியல்பு -: இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சைனா, மத்திய கிழக்கு நாடுகள் வட ஆப்பிருக்கா விற்குப் பரவிற்று. 16ம் நூற்றாண்டில் ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் மற்றும் மலேசியாவுக்குப் பரவிற்று. மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும். முக்கியமாக முள் முருங்கையில், இக்கொடிகள் மரங்களைப் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். எப்பொழுதும் பசுமையாகவும், கொடியின் கணுக்கள் சிறிது பெருத்தும் காணப்படும். இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். பச்சையாக எடுத்து அதன் நிறம் மாராமல் பதம் செய்தும் வைப்பார்கள். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிழகாக சுண்டி சிருத்து மாறிவிடும். இதுவே மிளகாகும். இது கொடி கட்டிங் மூலம் இனப் பெருக்கம் அதிகமாகச் செய்யப்படுகிறது.

வால் மிளகு மருத்துவப் பயன்கள்-

விட்டு விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.

பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தணமிட நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.

பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இதை சித்த மருத்துவத்தில் கொறுக்கு நோய் என்பார்கள். இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கராம் என இரண்டையும் போதிய ஆளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.

சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.

மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.

100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

வெற்றிலை உலர்ந்த வேரையும் மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும்.

அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

மிளகு ஒரு வெளிமருந்தாகவும் பயன்படும் பொருள். புழுவெட்டு எனும் aloepecia areata –விற்கு பல நேரங்களில் எந்த மருந்தும் பலனலளிப்பதில்லை. மிளகு தூள், வெங்காயச் சாறு, உப்பு கலந்து புழுவெட்டுள்ள பகுதியில் மெலிதாகத் தேய்க்க முடி வளரும்.

மிளகில் கால்சிய சத்து உள்ளது சிறிதளவு விட்டமின் A சத்துள்ளது. மிளகின் புரதமும், னார்ப்பொருலும், அதிலுள்ள நைட்ரஜன் சத்தும் கூட மிளகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதுபோல் அளவில் குறைவாக இருந்தாலும், அதன் நிறைவிற்குக் குறைவில்லாதவை.

குழந்தைப்பருவம் முதலே மிளகின் மகத்துவத்தை புரியும் படி மிரட்டாமல் சொல்லிக் கொடுத்து, மிளகை ரசித்து உண்ண குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் வரும் முன் காப்பதில் மிளகிற்கு இணை ஏதுமில்லை

பல நேரங்களில் ஆட்சியைப்பிடிக்கும் வரை ஒன்றாய் ஊர்வலம் வந்து விட்டு பதவி கிடைத்ததும் கூட்டணிகட்சிகளை ஓரமாய் ஒதுக்குவதுபோல, சமைத்தபின் மிளகை ஒதுக்கி ஓரமாக கழிப்பது பல நேரங்களில் நடக்கும். அது மிகத் தவறு. மிளகு மணமூட்டிமட்டுமல்ல. அதன் பிறசத்துக்கள் முழுமையாகச் சாப்பிட்டால்தான் உடலில் சேரும்.

மிளகு, ஆஸ்துமா நோயாளிகள் அன்றாடம் சாப்பிட வேண்டிய ஒரு கற்ப உணவு. மிளகில் உள்ள olioresin மற்றும் piperine, piperidine சத்துக்கள் மருத்துவ குணமுடைய முலக்கூறுகள். piperine, piperidine இரண்டும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை சீர் செய்யவும், அவையே சில வேளையில் அதிகபிரசங்கித்தனம் செய்யும் போது அதனை immune-modulation செய்கை மூலம்சரி செய்யவும் பயன்படுவதை பல நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆஸ்துமா நோயாளிகள் மிளகை ஒவ்வொரு உணவிலும் தூவிச் சாப்பிட வேண்டும். இருமல் இரவில் வந்து கஷ்டப்படும் குழந்தைகளுக்கு, தேனும் மிளகும் சேர்த்து மிளகுக்கஷாயம் வைத்து கொடுத்தால் உடனடியாக இருமல் நின்று குழந்தை சங்கடமின்றி உறங்கும். அசீரணமுடன் சங்கடப்படும் ஆஸ்துமாக்காரர்கள் நிறைய பேர் உண்டு. மதிய உணவிற்குப்பின் 2-3 வெற்றிலையில் மிளகு சேர்த்து சவைத்து சாப்பிட இரைப்பும் குறையும். அசீரணமும் சீராகும்.

மிளகை மோரில் 2 நாட்கள், வெற்றிலைச்சாறில் 2 நாள் ஊறவைத்து மோர் மிளகாய் காயவைப்பது போல் வற்றலாக காயவைத்துப் பின் பொடி செய்து வைத்துக் கொண்டு 2 சிட்டிகை அளவு தேனில் காலை மாலை உணவிற்கு முன் சாப்பிட சளி இருமல் தீரும். ஆஸ்துமா தொல்லை நன்கு கட்டுப்படும்.

Urticaria எனப்படும் திடீர் திடீர் என ஆங்காங்கே உடலில் சிவந்து தடிக்கும் தோல் அலர்ஜியில் மிளகு நல்ல பலனளிக்கும். மிளகுத்தூளை காய்கறிகளில் தூவி சாப்பிடுவதுடன், தினசரி காலையில் அருகம்புல்(ஒரு கைப்பிடி), வெற்றிலை(4) மிளகு(4)- எடுத்து கஷாயமாக்கிச் சாப்பிட தடிப்பு வருவது படிப்படியாக மறையும். எந்த ஒரு சாதாரண தோல் அலர்ஜி ஏற்படும் போது முதல் கை வைத்தியமாக மிளகை கஷாயமாக்கி சாப்பிடுவது நல்லது. அதே நேரத்தில் அலர்ஜியை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவும் கூடாது. முகம் கைகால் வீக்கத்துடன் மூச்சிரைப்பு உண்டாகி, சிறுநீர் தடை ஏற்படும் அலர்ஜிக்கு மிளகை தேடிக் கொண்டிருக்க்க் கூடாது

வயிற்றுப்புண்கள் அதிகமிருந்தால் மிளகை குறைவாகச் சேர்க்கவேண்டும். மிளகு அசீரணத்தை சரிப்படுத்தக்கூடியதென்றாலும், குடற்புண்கள் இருப்பவருக்கு அதன் வெப்பத் தன்மையால் வயிற்றெரிச்சலைத் தோற்றுவிக்கும். புலால் உணவு சாப்பிடும் போது கண்டிப்பாக மிளகு சேர்க்கப்பட வேண்டும். மிளகு புலால் உணவின் சீரணத்தைத் துரிதப்படுத்துவதுடன், அதில் ஏதேனும் உடலுக்கு ஒவ்வாத புரதப்பொருட்கள் இருப்பின் அதனால் ஏதும் தீங்கு விளையாமல் இருக்கவும் மிளகு பயன்படும்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.

தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.

மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை
மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட
வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.
மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

மிளகு ஊறுகாய்:
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.
கருமிளகு

பச்சையான பழுக்காத சிறு மிளகு காய்கள் கொடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, சூடான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு, பின்னர் உலர வைக்கப்படுகின்றன. இக்காய்களின் வெளித்தோல் சூட்டினால் உறிக்கப்படுவதனால், இக்காய்கள் வேகமாக உலருவதோடு, அதன் சதைப்பகுதி விதையுடன் காய்ந்து, சுருங்கி, பூஞ்சைகளின் மூலமாகக் கருநிறத்தைப் பெறுகிறது. இக்காய்களை உலர்த்துவதற்கு இயற்கையான சூரிய ஒளியும், பல இயந்திரங்களும், இடத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உலர்த்தப்பட்ட மிளகு, பின் சரியான பொதிகளில் அடைக்கப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.
வெண்மிளகு

பெரும்பான்மையான நாடுகளில் கருமிளகே உபயோகத்தில் இருப்பினும், சில பகுதிகளில், வெண்மிளகும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய வழிமுறைகளைப் போலின்றி, வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்படுகின்றன. இதன் மூலம், பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்படுகிறது. பின், பழத்தின் சதைப் பகுதி தேய்த்து அகற்றப்பட்டு, விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகள் வெண்மிளகாக சந்தைப்படுத்தப்படுகிறது. மற்ற சில முறைகளும் உபயோகத்தில் உள்ளன. இவற்றில் சிலவற்றில் பழுக்காத மிளகுக் காய்களும் வெண்மிளகு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

பச்சைமிளகு, கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள, கந்தக டை ஆக்சைடுடன் கலக்குதல், உறைய வைத்து உலர்த்துதல் ஆகிய சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வினிகருடன் ஊற வைக்கப்பட்ட பச்சை மிளகுக் காய்களும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. ஆசிய சமையல் முறைகளில் ஒன்றான, தாய்லாந்து நாட்டுச் சமையல் முறையில், புதிதாக பறிக்கப்பட்ட பச்சை மிளகுப் பழங்கள் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. உலர வைக்கப்படாத அல்லது பாதுகாக்கப்படாத மிளகுக் காய்கள் விரைவில் கெடும் இயல்பு கொண்டவை.

கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின்,தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன.மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.சளி, கோழை, இருமல், நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது.மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.உடலில் உண்டாகும் சுரத்தையும்(காய்ச்சல்) போக்கும் தன்மை உடையது.இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.

மிளகின் பொதுக்குணங்கள்
மிளகு நறுமணத்துக்கும், சுவைக்கும் மட்டும் இல்லை, சிறந்த மருந்தும் ஆகும். நரம்புகளுக்கும், ஜீரணத்திற்கும் ஏற்ற டானிக்காகும்.

சரகஸம்ஹிதை படி மிளகு

தன்மை – கார்ப்புச் சுவை உள்ளது. கபத்தையும், வாதத்தையும் போக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இருமல் கிருமி நோய்களை போக்கும். தக்க படி பயன்படுத்தினால் இராசயனமாகும்.

தீர்க்கும் நோய்கள் – இழுப்பு, வயிற்று வலி, கிருமிநோய், தவிர நச்சுகளால் தோன்றும் துன்பம், கண்நோய் இவற்றை போக்கும்.

பயன் – இருமல் நிற்க மிளகுத்தூள், சர்க்கரை, நெய், தேன் இவற்றை கலந்து உண்டால் இருமல் நீங்கும். மிளகு கலந்த மருந்துகளான மரீச்யாதி தைலம். தேக ராஜமரீசம் இவைகளால், வாத கிரஹணி, தோல் அரிப்பு, சொறி இவற்றை போக்கும்.

மிளகின் மருத்துவ குணங்கள்

ஜீரணத்திற்கு – கருமிளகு வாய்வுத்தொல்லை, அஜீரணம் இவற்றை போக்கும்.மோருடன் அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து குடிக்கலாம். இதனுடன் ஜீரகம் சேர்த்தால் இன்னும் நல்லது. மிளகு பசியை தூண்டும்.

திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவில் கலந்த சூரணம் திரிகடுகம். இதை 2 கிராம் எடுத்து தேனுடன் சாப்பிட வாயுக்கோளாறை போக்கும். திரிகடுகம் மிக பழமையான, உபயோகமான சூரணம்.

நஞ்சுகளை போக்க – மிளகு எல்லா வித நஞ்சுகளையும் முறிக்கும் ஆற்றல் உள்ளது. தினசரி 5 – 6 மிளகை தூள் செய்து வெற்றிலையில் வைத்து, தேன் கலந்து, அப்படியே மென்று விழுங்கினால் எந்த நஞ்சும் பாதிக்காது.

இருமல் நிற்க – இருமலுக்கு கைகண்ட மருந்து மிளகு கஷாயம். இருமல் ஆரம்பித்தவுடனே வீட்டிலிருப்பவர்கள் செய்து கொடுக்கும் கஷாயம் இது. தொண்டை நோய்களுக்கும் மிளகு நல்லது. மிளகை அடிக்கடி உபயோகித்தால் குரல் வளம் பெருகும்.

கொலஸ்ட்ரால், கொழுப்பு நீங்க – மிளகில் உள்ள ‘காப்சைன்’ கொலஸ்ட்ராலை குறைப்பதற்காக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் 5 லிருந்து 10 மிளகை தூள் செய்து தண்ணீருடன் அருந்தவும். கொலஸ்ட்ராலை குறைப்பதால், மாரடைப்பு வராமல் காப்பதற்கு மிளகு நல்ல மருந்து என்ற தற்போதைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

மறதிக்கு – சிறிதளவு மிளகுப் பொடியை தேனுடன் சேர்த்து உண்ண மறதி குறையும். ஞாபக சக்தி பெருகும்.

ஆண்மை குறைவுக்கு – தினமும் 6 மிளகுகளுடன் 4 பாதாம் பருப்பு சேர்த்து பாலுடன் உட்கொள்ள, ஆண்மை பெருகும். வயது முதிர்வை குறைக்கும்.

ஜலதோஷம், ஜுரம், தலைவலிக்கு – மிளகு கஷாயம் ஜலதோஷத்தை குறைக்கும். மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவில் சேர்த்து அரைத்து, மிளகளவு மாத்திரைகளாக செய்து கொள்ளவும். இதில் 2 – 3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, காய்ச்சல் குணமாகும்.மிளகை சுட்டு அதன் புகையை சுவாசித்தால் தலைவலி, சளி குறையும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும். ஜுரம் தணிந்த பின் வரும் பலவீனத்தை மிளகு போக்கும். சளி, தும்மல், ஆஸ்துமா இவற்றுக்கும் மிளகு கஷாயம் பயன்படுகிறது. மலேரியாவை மிளகு கட்டுப்படுத்தும்.

தசை, மூட்டு வலிகளுக்கு – எள் எண்ணெய்யில், மிளகுப்பொடியை வறுத்து இதை வலிக்கும் இடங்களில் தடவலாம், வலி குறையும்.

பல், ஈறுவியாதிகளுக்கு – மிளகுப் பொடியை உப்புடன் சேர்த்து பல் துலக்குவது வாய் துர்நாற்றம், பல்சொத்தை, ஈறு வீக்கம், பல்வலி போன்றவற்றை குறைக்கும். பயோரியாவுக்கும் இந்த பற்’பசை’ நல்லது.மிளகிலிருந்து எடுக்கப்படும் மிளகு தைலம் உணவுக்கு மணம் கூட்டவும் வாசனை திரவியங்கள் தயாரிப்பிலும் பயன்படும். தவிர இந்த தைலம் ஜுரம் குறைய உதவுகிறது.பச்சை மிளகு மூலநோய், வாதநோய்களை கட்டுப்படுத்தும்.எச்சரிக்கை மிளகு உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கும். அதிகமாக உட்கொண்டால் கரு கலையும். நரம்பு மண்டலத்தை பாதிக்கும். தேவையற்ற சுழற்சி, மந்த நிலை தூக்கமின்மை இவற்றை மிளகு சீராக்கும். கல்லீரலை பாதுகாக்கும்.மிளகு கலந்த உணவுகள் பசியை தூண்டும்.ஆப்ரிக்கா மிளகை உண்டால் அது உடலில் ஒரு வித திரவத்தை / ஒரு வித வாசனையை உண்டாக்குகிறது. இதனால் கொசுக்கள் கடிப்பதில்லை என்றும் நம்புகிறார்கள்.சீன மருத்துவத்தில் மிளகு, வாந்தி வருவதை தடுக்கவும், தலைசுற்றலை தவிர்ப்பதற்கும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.மிளகில் உள்ள பைப்பரின் பைப்பரின் எனும் அல்கலாய்டு மிளகில் உள்ள ஒரு கெட்டியான வேதிப்பொருள். இது தண்ணீரில் கரையாது. ஆயுர்வேதத்தில் மிகவும் பயன்படும் பொருட்களில் மிளகும் உண்டு. சீன வைத்தியத்தில், இந்த பைப்பரினலிருந்து தயாரிக்கப்படும் ஆன்டிஎபிலெப்ஸிரின் என்ற பொருளை வலிப்பு நோய்களுக்கு மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. ‘பீடா கரோடின்’, வைட்டமின் பி, மற்றும் சத்துக்களை உடல் கிரகிக்க பைப்பரின் உதவுகிறது. ஆனால் அதிக அளவு பைப்பரின் (ஒரு நாளுக்கு 15 மி.கி. க்கு மேல்) உட்கொள்வது தவறு.

வால் மிளகு
மிளகு, சுக்கு, திப்பிலி, ஏலக்காய், லவங்கப்பட்டை, லவங்கபத்திரி, சிறுநாகப்பூ, சர்க்கரை இவை சேர்த்து செய்யப்படும் ‘மிளகாதி சூரணம், இருதய நோய், தொண்டை நோய் மற்றும் அஜீரண கோளாறுகளை போக்கும்.

சிறு நீரகக் கல்

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப் படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர்.


இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!

அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளன வாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி (Lemonade therapy) என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீ ரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டு தான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?
சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம்.

இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில், "கால்சியம் வகைக் கற்கள்
சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு
வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும்.
அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில்
வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச்
சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ்
நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட் ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laserlithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத் தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர்.

சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தெரபியை முயற்சித்துப் பாருங்களேன்.